வந்துவிட்டது கொரோனா ஓட்டல்: சுவிட்சர்லாந்தில் அறிமுகம்

ஜெனிவா: சுவிட்சர்லாந்தை சேர்ந்த சொகுசு ஓட்டல் கொரோனாவை மையப்படுத்தி, தானியங்கி வசதிகளுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவதே தீர்வாக கருதப்படுகிறது. இதனை சரியாக வாய்ப்பாக கருதிய ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள லே பிஜோ என்னும் சொகுசு ஓட்டல் , தனது முழுவதும் தானியங்கி மயமாக்கப்பட்ட ஓட்டலில், கொரோனா பரிசோதனை, டாக்டர்கள் மற்றும் 24 மணி நேர நர்ஸ் கண்காணிப்புடன் கூடிய புதிய பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.


தனி சமையலறை, உடற்பயிற்சி கூடம், மசாஜ் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மனிதர்களின் உதவியின்றி சொகுசு ஓட்டலின் பிரத்யேக ஆப் முலம் பெற்றுகொள்ளலாம். கொரோனா பரிசோதனை உள்ளிட்டவற்றுடன் 14 நாட்கள் வரை தங்குவதற்கு இந்திய மதிப்பில் ரூ. 58.33 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய ஓட்டலின் சி.இ.ஓவும், துணை நிறுவனருமான அலெக்ஸாண்டர் ஹப்னர், கொரோனா பாதிப்பில் இருந்து விலகியிருக்க, சொகுசு அறைகள் வேண்டுமென சில வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. எனவே விருந்தினர்களை ஈர்க்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் குறித்து விளம்பரப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு இரண்டு விசாரணை மட்டுமே வந்தது. அடுத்து நான்கு, ஐந்து, ஆறு என அதிகரித்துள்ளது' என்றார்.
ஒருநாள் இரவு கூட தங்கலாம் என்றாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரு வாரங்கள் மற்றும் இரண்டு மாதங்களை தேர்வு செய்வதாகவும், ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியானவர்கள் ஓட்டலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் .லேசான அறிகுறியுடன் இருப்பவர்கள் தங்க அனுமதிக்கப்படுவர்' எனவும் ஹப்னர் தெரிவித்தார்.

இதேபோன்று ஆஸ்திரேலியா, தாய்லாந்து நாடுகளில் உள்ள சொகுசு ஓட்டல்களும் கொரோனாவை மையப்படுத்தி பேக்கேஜ்களை அளித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.